ஒரு ஓட்டல் முதலாளியின் கதை
ஒரு ஓட்டல் ஒன்றில் புதிதாக சேரும் முருகனை ஓட்டல் முதலாளி ஒரு நிபந்தனையுடன் சேர்த்து கொள்கிறார். அத்தியாவசியத்திற்கு தவிர வேறு எந்த செலவுக்கும் நீ என்னிடம் காசு கேட்க கூடாது என கண்டிஷன் போட்டார். ஆனால் உனக்கு தேவையான நேரத்தில் நானே மொத்தமாக கொடுப்பேன் என்று ஒரு வாக்குறுதியும் கொடுத்தார்.
பசியால் வாடி வதங்கியிருந்த முருகனுக்கு அப்பொழுது உணவு மட்டுமே தேவையாயிருந்தது. அதனால் மூன்று வேளை உணவாவது கிடைத்தால் போதும் என்று அவனும் சரியன்று ஒத்துக்கொண்டு ஒட்டலில் வேலைக்கு சேர்ந்தான். அதற்கு பிறகு அவன் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான் .
அந்த ஓட்டலை தன்னுடைய ஓட்டல் போலவே நினைத்து முழுமையாக உழைத்தான். இடையில் ஊருக்கு போகவேண்டும் என்று அவன் எவ்வளவு பணம் கேட்டும் ஓட்டல் முதலாளி தரவில்லை.
ஒருவேளை சோறு போடக் கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று அவனை அடக்கி அமைதியாக இருக்க வைத்தார். சில வருடங்கள் ஓடியது. அவனுக்கும் ஓட்டல் முதலாளியின் அன்பும் கண்டிப்பும் பிடித்துப் போனது. அதனால் எதைப்பற்றியும் கவலைபடாமல் உழைப்பில் மட்டும் கவனம் செலுத்தினான்.
அப்படியே வருடங்கள் ஓடின. சில விடுமுறை தினங்களில் முதலாளிக்கு தெரியாமல் கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் அவனை பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள். ஓட்டல் கடையில் வேலை செய்பவருக்கு பெண்ணை தர முடியாது என்று பல இடங்களில் மறுத்துவிட்டனர். அதை எல்லாம் முதலாளி கண்டும் காணாமலும் இருந்தார். அவனை ஏதும் கேட்கவும் இல்லை. அவன் மேல் பரிதாபப்படவும் இல்லை.
இன்றோடு வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு நாள் முதலாளி அவனை அழைத்தார். அதிக ஓட்டல் இல்லாத, ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று புதிய கடையை பார்த்தார். முருகா இந்த இடத்தில் கடையை வைத்தால் ஓடுமா என்று ஓட்டல் முதலாளி அவனிடம் கேட்டார். அவனும் “ஆமா…முதலாளி, இந்த இடம் நல்ல இடம் நல்ல வியாபாரம் ஆகும்” என்றான்.
கடைக்கு முன் பணம் கொடுத்தார். அந்த கடைக்கு தேவையான எல்லாத் தட்டு முட்டு சாமான்களையும் வாங்குதற்கு அவனையே அனுப்பி வைத்தார். அவனோடு இணக்கமாக இருந்த சக தோழர்களையும் அவனோடு பணிக்கு ஒத்தாசை செய்யச் சொன்னார். புதிய ஓட்டல் திறவிழாவிற்கு நாள் குறிக்கப்பட்டது. ஐந்து நாள் முன்னதாக அவர் முருகனை அழைத்து, “கடை வேலை எல்லாம் சரியாக செல்கிறதா” என கேட்டார்.
பின்னர் கடை சாவியை அவனிடம் கொடுத்து, “நீ தான் முருகா கடைக்கு சொந்தக்காரன்” என்றார். அவனும் ஆச்சரியமாக “முதலாளி என்ன இது, திடீரென்று இப்படி சொல்கிறீர்கள்” என்று கேட்டேன்.
“உன்னுடைய பணம்தான் முருகா, ஆனால் அதில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம் அவ்வளவே”…என்றால் முதலாளி.
“நீ உன்னுடைய உறவுக்காரர்களை ஓட்டல் திறப்பு விழாவிற்கு அழைத்து உபசரி….பிறகு தானாக எல்லாம் நடக்கும்” என்றார்.
அப்படியே ஓட்டல் திறப்பு விழாவும் தடபுடலாக நடந்தேறியது. சாப்பாடு போடாமல் விரட்டியடித்த உறவினர்கள் கூட ஓட்டல் அருமை, சாப்பாடும் அருமை என சொன்னார்கள்.
பிறகு முருகனின் தூரத்து மாமா சொந்தத்தில் வசதியான மாமா ஒருவர் அவரே தனது பெண்ணை முருகனுக்கு திருமணம் செய்ய விரும்பினார். பிறகு ஓட்டல் முதலாளியின் தலைமையில் முருகன் மாமா பெண்ணை திருமணம் செய்து மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறான்.
ஆனால் அவர் சொன்ன ஒரு தாரக மந்திரம், அது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதை முருகன் இன்று வரை கடைப்பிடித்து வருகிறான்.
“உனக்காக மட்டும் வாழாதே…. உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை”
என்று அவர் சொன்னதை இன்றுவரை முருகன் கடைபிடித்து வருகிறான்.
ஒருநாள் அந்த முதலாளி இறக்கிறார். அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட உறவினர்களை காட்டிலும், அவரால் வளர்க்கப்பட்ட மனிதர்களின் அழுகையே அதிகமாக இருந்தது அதில் முருகனையும் சேர்த்து.
சில மனிதர்களின் சாதனைகள் வெளியில் தெரிவதில்லை ஆனால் அவர்களது இறுதி ஊர்வலத்தில் தெரியும்.
அப்படிபட்ட நல்ல முதலாலளிக்கு சமர்பனம்
Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|